நீச்சல் குளத்தில் நண்பருக்கு மரணம் விளைத்ததாக ஐவர் மீது குற்றச்சாட்டு

போர்ட் டிக்சன், ஜூலை 19-

கடந்த வாரம், ஹோட்டல் நீச்சல் குளத்தில் உடல் ஊனமுற்ற தனது நண்பருக்கு மரணம் விளைவித்ததாக மூன்று பெண்கள் உட்பட ஐவர் போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

36 வயது டி.மகராஜ், / 34 வயது சண்முகசேர்வை, / 42 வயது ஃபேசதுன் ஃபிரஸ் அரிஃபின் / 31 வயது பிரவீணா மற்றும் 34 வயது சுவிப்ரா ஆகிய ஐவர், மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கனி முன்னிலையில் நிறுத்துப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுலை 13 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் போர்ட்டிசக்சன், பத்து 3 ( தீகா )வில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் இந்த ஐவரும் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தங்களது நண்பரான 38 வயது உடல் ஊனமுற்றவரின் மரணத்திற்கு இந்த ஐவரின் கவனக்குறைவும், அலட்சியப் போக்கும் காரணமாகும் என்று குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

சிலாங்கூர், சுபாங் ஜெயாவை சேர்ந்த இந்த ஐவரும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 304A பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த ஐவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த ஐவரையும் தலா ஒரு நபர் உத்தரவாதத்துடன் 8 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கனி அனுமதி அளித்தார்.

தனது நண்பரின் பிறந்த நாளை ஒரு ஹோட்டலில் கொண்டாடுவதற்காக உடல் ஊனமுற்றவர் உட்பட அறுவர் சுபாங் ஜெயாவிலிருந்து கடந்த ஜுலை 11 ஆம் தேதி போர்ட்டிக்சனுக்கு சென்று மூன்று நாள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இரவு 10 மணிக்கு மேல் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு அனுமதியில்லை என்று நன்கு தெரிந்தும், உடல் ஊனமுற்றவருடன் இந்த ஐவரும், அந்த ஹோட்டல் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி பிறந்த நாள் கொண்டாடுவதாக கூறி, நள்ளிரவு 12 மணிக்கு அந்த நீச்சல் குளத்தில் குதித்து, விளையாடி இருக்கின்றனர்.

அந்த அதிகாலை வேளையில் நீச்சல் குளத்தில் உல்லாசமாக குளித்துக்கொண்டு இருந்த போது சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அந்த குளத்தில் உடல் ஊனமுற்ற தங்கள் நண்பர் காணாததை இந்த ஐவரும் உணர்ந்துள்ளனர். தேடிப்பார்த்ததில் அவர் நீரில் மூழ்கியது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஐவர் போதைப்பொருள் உட்கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS