ஜார்ஜ் டவுன்,ஆகஸ்ட் 08-
பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஏலத்திலிருந்து எடுக்கப்பட்ட தங்கம் என்று கூறி ஒரு தனி நபரை ஏமாற்றியதாக 35 வயது குடும்பமாது ஒருவர், ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
நூர் திராணி முகமது இப்ராஹிம் என்று அந்த குடும்பமாது, மாஜிஸ்திரேட் சிதி நூருல் சுஹைலா பஹாரின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாதுவின் நம்பகத்தன்மை நிறைந்த வார்த்தைகளை நம்பி, அந்த தங்க ஆபரணங்களை பெறுவதற்கு 53 வயது மாது, ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 256 வெள்ளியை நான்கு வங்கி கணக்குகளின் வாயிலாக செலுத்தியதாகவும், அந்தப் பணத்தைநூர் திராணி முகமது இப்ராஹிம் பெற்றுக்கொண்டப் பின்னர் மோசடி செய்து விட்டதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அவர் இக்குற்றத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஜார்ஜ்டவுனில் புரிந்ததாக குற்றப்பதிவில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து அந்த மாது விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 12 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.