மஇகா அகதியைப் போல கவனிப்பாரற்று கிடக்கிறதா? / குற்றச்சாட்டை மறுத்தார் பேரா மந்திரி பெசார்

கோலா காங்சார், ஆகஸ்ட் 12-

அரசாங்கப் பார்வையிலிருந்து மஇகா கவனிப்பாரற்று கிடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் மறுத்துள்ளார்.

பேரா மாநில பாரிசான் நேஷனல், மஇகாவை ஒரு போதும் ஓரம்கட்டவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பேரா மாநில அரசாங்கத்தில் ஊராட்சி மன்றங்கள் மற்றும் கிராம மேம்பாடு, பாதுகாப்புக்குழுக்களிலும் மஇகாவின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் மஇகாவின் அடைவு நிலையைப் பொறுத்தே அவர்களுக்கான நிலையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ சாரணி தெரிவித்தார்.

பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக மஇகா பிரதிநிதிகளை நியமிக்க இயலாது. ஆனால் பேரா மாநில தலைவர் டத்தோ V. இளங்கோ, பேரா மாநில தண்ணீர் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு இருப்பதை மந்திரி பெசார் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று 15 ஊராட்சி மன்றங்களிலும் 14 கிராம மேம்பாடு, பாதுகாப்புக்குழுக்களிலும் ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் ஒரு மஇகா பிரதிநிதி நியமிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS