குவா முசாங், ஆகஸ்ட் 13-
கிளந்தான், நெங்கிரி சட்டமன்ற தொகுதியில், பணம் பட்டுவாடா தானியங்கி இயந்திரம் -ஏடிஎம் வசதியை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கும் அத்தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தேசிய முன்னணி விளக்கம் அளித்துள்ளது.
அங்கு ஏடிஎம் இயந்திரத்தை வைப்பதற்கான முயற்சியை, முகமது அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி , தேசிய முன்னணியின் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே, நீண்டகாலமாகவே முன்னெடுத்து வந்துள்ளதாக, கிளந்தான் அம்னோ தலைவர் அஹ்மத் ஜஸ்லான் யாகூப் தெரிவித்தார்.
மக்களுக்கு உதவுவதில், முதலில் அவர்களது தேவைகளைப் பார்க்க வேண்டும். தேவைகள் இருந்தால் மட்டுமே, அதற்கான வதிகளை ஏற்படுத்தி தர முடியும்.
நெங்கிரி -யில் இடைத்தேர்தல் நடைபெறாமல் இருந்திருந்தாலும், அங்கு ஏடிஎம் வசதி ஏற்படுத்தி தரப்பட்டிருக்கும் என ஜஸ்லான் கூறினார்.
இடைத்தேர்தலுக்கான பரப்புரைக் காலத்தில், நெங்கிரி-யில் ஏடிஎம் வசதியை ஏற்படுத்துவதற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது தொடர்பில், பெர்சாத்து கட்சியின் உதவித்தலைவர்
ராட்ஸி ஜிடின் இதற்கு முன்பு கேள்வியை எழுப்பினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்ஏபி அஜீஸ் யூசோஃப் -ப்பின் அதிகாரியாக இருந்த காலத்தில், தேசிய முன்னணி வேட்பாளர் அஜ்மாவி, நெங்கிரி தொகுதியில் ஏன் ஏடிஎம் வசதியை ஏற்படுத்தியிருக்கவில்லை எனவும் ராட்ஸி வினவியிருந்தார்.
அவரது அக்கேள்விகளுக்கு அவ்வாறு பதிலுரைத்த ஜஸ்லான் , ஏடிஎம் விவகாரத்தை பெரிதாக்குவதைவிட, ராட்ஸி, கிளந்தான் அரசாங்கத்தின் காடழிப்பு, அந்நிய நிறுவனங்களுக்கு நிலத்தை வழங்கியது தொடர்பான விவகாரங்களை எழுப்பலாம் என்றார்.