ஈப்போ , ஆகஸ்ட் 13-
தபா சிறைச்சாலைக்குள் ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சிறைச்சாலை அதிகாரிகளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த சிறைச்சாலைகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மேலும் பலர் வாக்குமூலம் அளிப்தற்கு அழைக்கப்படுவர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் இசா தெரிவித்தார்.
இதுவரையில் ஐந்து அதிகாரிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. . சிறைச்சாலையின் நுழைவாயிலுக்கு பொறுப்பேற்றுள்ள அதிகாரி, CCTV கேமராக்களை கண்காணித்து வரும் அதிகாரி மற்றும் சிறைச்சாலைக்குள் ட்ரோன் இருப்பதை கண்டு பிடித்த அதிகாரி ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தாப்பா சிறைச்சாலையில் ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டது இது முதலாவது சம்பவம் அல்ல. பல முறை நடந்து இருக்கலாம். ஆனால், சிறைச்சாலைக்குள் முதல் முறையாக ட்ரோன் விழுந்து நொறுங்கியிருப்பதால் இச்சம்பவத்தை கண்டு பிடிக்க முடிந்தது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
இச்சம்பவத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு நேரடியாக விசாரணை செய்து வருவதாக Datuk Azizi விளக்கினார்.