ஜொகூர் , செப்டம்பர் 26-
ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு தினங்களே எஞ்சியுள்ள வேளையில் இந்த இடைத் தேர்தலில் சீனர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று வதந்திகள் பரவியுள்ள வேளையில் சீன வாக்காளர்களை கவரும் நடவடிக்கையில் ஒற்றுமை அரசாங்கம் முழு வீச்சில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கியுள்ளது.
இந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் 18 பகுதிகளில் உள்ள மக்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். எனினும் இந்த 18 இல், எட்டு பகுதிகள் மட்டுமே ஒற்றுமை அரசாங்கத்தின் பாரிசான் நேஷனல் வேட்பாளர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லா- விற்கு சாதகமாக உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த எட்டு இடங்களும் மலாய்க்கார வாக்காளர்கள் பெரும்பான்மையினராக கொண்டுள்ள இடங்களாகும்.
தவிர, இதர 10 இடங்கள் யாருக்கு வாக்காளிப்பார்கள் என்று திட்டவட்டமாக கூற இயலாத நிலையில் மதில்மேல் பூனைகளாகவே கருதப்படுகின்றனர். இந்த பத்து இடங்களில் எட்டு இடங்கள் சீனர்களை பெரும்பான்மையினராக இருப்பதால், அவர்களை இலக்காக கொண்டு ஒற்றுமை அரசாங்கம் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் அம்னோ வேட்பாளர் சையத் ஹுசைன் – க்கும் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் ஹைசான் ஜாபர்- க்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.