ஜெம்போல்,செப்டம்பர் 27-
காதலனால் கத்தியால் குத்தப்பட்ட இந்தோனேசியப் பெண் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நெகிரி செம்பிலான், ஜெம்போல், தமான் ஏசிபிஇ, பஹாவ், ஜெம்போல் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
வீட்டில் அந்த காதல் ஜோடிக்கு மத்தியில் ஏற்பட்ட வாய் தகராறு, பின்னர் கத்தி குத்தில் முடிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தோனேசியாவிற்கே திரும்பப் போவதாக 30 வயது பெண் தெரிவித்ததைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவரின் 38 வயது மியன்மார் காதலன், வாய்த் தகராற்றில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் பொறுமை இழந்தவராக காணப்பட்ட அந்த நபர், ஆவேசத்துடன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட Rohingya இனத்தைச் சேர்ந்த அந்த மியன்மார் பிரஜை, பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற வேளையில் அந்த இந்தோனேசியப் பெண், சிகிச்சைக்காக கோலா பிலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.