ஈப்போ செப் 29-
‘வழக்கறிஞர் தொழிலில் எனது தொழில் ஆசான் வழக்கறிஞர் மதியழகன்’ என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி புகழாரம் சூட்டினார்.
வழக்கறிஞர் தொழிலை தாம் தொடங்கிய போது, ஒரு வழக்கு விசாரணையை எப்படி நடத்துவது, அந்த விசாரணைக்கு எப்படி தயாராவது என்பதை கற்றுத் தந்தவர் வழக்கறிஞர் மதியழகன் என்றார் அவர்.
நேற்று இங்கு வழக்கறிஞர் மதியழகன் எழுதிய ‘எண்ணங்கள் வண்ணங்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசினார்.
முதல் முறையாக என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று, நீதிமன்றத்தில் பேச வைத்தவர் மதியழகன்.

அதே போல் ஒரு வழக்கை எப்படி தயார் செய்வது, அந்த வழக்குக்கான சாட்சிகளை எப்படி தயார் செய்வது என்பதை எனக்கு கற்றுத் தந்தவர்.
இந்த நிலையில்வழக்கறிஞர் தொழிலில் எனது முன்னோடி வழக்கறிஞர் மதியழகன் தான்’ என்றார் அவர்.அதே போல் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, பிரதமர் இலாக்கா ( சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் தமது அரசியல் ஆசான் என அவர் சுட்டி காட்டினார்.
நாடு தழுவிய நிலையில் தம்மை அழைத்துச் சென்று அரசியல் மேடையில் பேச வைத்தவர் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் என அவர் தெரிவித்தார்.
இன்று ஒரு துணையமைச்சராக தாம் பதவி வகிப்பதற்கு முக்கிய காரணம் இவர் தான் என அவர் சொன்னார்.

நாங்கள் மூவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள்.
வழக்கறிஞர் மதியழகன் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் பின்னணியை சேர்ந்தவர்.
வழக்கறிஞர் குலசேகரன் ஜசெக கட்சியை சேர்ந்தவர்.
அதே போல் மக்கள் நீதி கட்சியை சேர்ந்த ஒருவர்.
நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்த போதும், எங்களின் இலக்கு ஒன்று தான்.
இந்திய சமுதாயத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுத்து வருகிறோம் என அவர் சொன்னார்.
இதனிடையே பல கட்டுரைகளை தொகுத்து ஒரு நூலாக வெளியாகி உள்ள வழக்கறிஞர் மதியழகனின் ‘எண்ணங்கள் வண்ணங்கள்’ நூல் பேரா மாநில நூலகத்தில் மட்டுமின்றி நாடு தழுவிய நூலகங்களிலும் வைக்கப்பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.