கோலா பிலா ,செப்டம்பர் 30-
நெகிரி செம்பிலான், ஜாலான் குவாலா பிலா – தம்பின் சாலையின் 21 ஆவது கிலோ மீட்டரில் நால்வர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் நிகழ்ந்தது. இதில் 64 வயது தந்தையும், 31 வயது மகனும் உயிரிழந்ததாக குவாலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் அமரன் மோஹட் கனி தெரிவித்தார். நால்வர் பயணம் செய்த Perodua Axia கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்பாலத்தில் தூணில் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதில் காரை செலுத்திய தந்தையும் அவரின் அருகில் அமர்ந்திருந்த மகனும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 62 வயது தாயார் மற்றும் 28 வயது மகன் ஆகியோர் கடும் காயங்ளுக்கு ஆளானதாக அம்ரான் முகமட் கனி தெரிவித்தார்.