முடிச்சி விட்டுருப்பாங்க.. ராஜினாமாவால் தப்பித்த பாபர் அசாம்.. பாகிஸ்தானின் அடுத்த கேப்டன் யார்?

அக்டோபர் 02-

கராச்சி: பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்சி பதவியில் இருந்து விலகுவதாக அந்த அணியின் பாபர் அசாம் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கியது பெருமையளிப்பதாக கூறியுள்ள பாபர் அசாம், வரும் நாட்களில் எனது பேட்டிங் மற்றும் சொந்த வளர்ச்சியில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகுவதாக அறிவித்தார். இதன்பின் பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி நியமனம் செய்யப்பட்ட நிலையில், திடீரென டி20 உலகக்கோப்பைக்கு முன் மீண்டும் பாபர் அசாமை அந்த அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது.

ஆனால் உலகக்கோப்பை தொடரை விடவும் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. சூப்பர் 8 சுற்றுக்கே முன்னேறாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதன்பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்சி மீது பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.

அதேபோல் அடுத்த கேப்டனுக்கான ரேசில் முகமது ரிஸ்வான் முதல்முறையாக முன்னிலைக்கு வந்தார். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கும்பல் அரசியலை கலைவதற்கு, அவர் தான் சரியான நபராக இருப்பார் என்று பயிற்சியாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட உள்நாட்டு சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பை தொடரில், எந்த அணிக்கும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்படவில்லை.

இருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட பாபர் அசாம் ஒரு சதம் உட்பட 230 ரன்களை விளாசினார். இதனால் பாபர் அசாம் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக கூறினர். ஏனென்றால் தொடர்ச்சியாக 16 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாபர் அசாம் தனது எக்ஸ் பக்கத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு எடுத்துள்ளேன். இதுகுறித்து கடந்த மாதமே, பிசிபி நிர்வாகத்திற்கும், அணி நிர்வாகத்திற்கும் கூறிவிட்டேன்.

இந்த அணியை வழிநடத்தியது பெருமையளிக்கும் விஷயம். ஆனால் இப்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் சூழலில் உள்ளேன். கேப்டனாக இருக்கும் போது வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதனால் இனி பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் அளித்து, குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன்.

அதேபோல் எனது ரோலில் தெளிவு கிடைக்கும் என்பதோடு, சொந்த வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவுள்ளேன். இதுவரை இணைந்து செய்த சாதனைகளை நினைத்து பெருமை கொள்கிறேன். இனி வீரராக பயணிக்க ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியை இதுவரை 43 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ள பாபர் அசாம், 26 போட்டிகளில் வெற்றிபெற்றும், 15 போட்டிகளிலும் தோல்வியையும் சந்தித்துள்ளார். அதேபோல் 85 டி20 போட்டிகளில் 48 வெற்றி, 29 தோல்வியுடன் உள்ளார். சொந்த மண்ணில் வழிநடத்திய 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளார். மேலும், பாகிஸ்தானின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS