தஞ்சோங் மாலிம்,அக்டோபர் 05-
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
கடந்த காலத்திலோ அல்லது அண்மையிலோ நாட்டின் வருமானத்திலிருந்து கோடிக்கணக்காண வெள்ளியை அபகரித்த விஷயத்தை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறினார்.
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாடு இன்னமும் ஓர் அரசியல் சாக்காக பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கிராமத் தலைவர், பொங்குலு முதல் இமாம் வரை அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் பங்களித்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு திருடும் உரிமையை அது அளிக்குமா? பள்ளிவாசலுக்கு பங்களித்தார் என்பதற்காக இமாம் அங்கு திருட முடியுமா? என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.
அதே போல் ஒரு நிதி அமைச்சர் தனது பங்களிப்புக்காக திருடியதை நியாயப்படுத்த முடியுமா? என்று பிரதமர் வினவினார்..
இன்று தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகமான உப்ஸியில் கல்வித் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.