கோலாலம்பூர், நவம்பர் 05-
இன்று நவம்பர் 5 ஆம் தேதி வட கிழக்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ளவும், தேவையான முன்னேற்பாடுகளையும் செய்யவும் நாடு தழுவிய நிலையில் 24 ஆயிரத்து 263 தீயணைப்பு, மீட்புப்படை வீரர்களும், அதிகாரிகளும் தயார் நிலையில் இருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.
இந்த ஆயத்தப்பணியில் உதவித் தீயணைப்பு, மீட்புப்படையினர் மற்றும் தன்னார்வ படையினரும் பங்கு கொள்வர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வட கிழக்குப்பருவ மழையில் வெள்ளப்பேரிடருக்கு வித்திடக்கூடிய கிழக்கு கரை மாநிலங்களும், இடர்மிக்க இதர மாநிலங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். பாதிக்கப்படும் மக்களை நிவாரண மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு 5 ஹெலிகாப்டர்கள், 3 ட்ரோன்கள், 293 நான்கு சக்கர இழுவை பெருவாகனங்கள், 86 வேன்கள், 72 லோரிகள் பயன்படுத்தப்படும் என்று டத்தோ நோர் ஹிஷாம் தெரிவித்தார்.