காஜாங், நவ.7-
காஜாங் பண்டார் டெக்னோலோஜியில் உள்ள வாடகை வீடொன்றின் அறையில் இரத்த வெள்ளத்தில் பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உதவும் பொருட்டு 5 மியான்மார் பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மதியம் 1.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பண்டார் டெக்னோலோஜி காஜாங் மற்றும் செமினியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் 28 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து சந்தேகப்பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
அந்தப்பெண்ணை கொலை செய்வதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படும் கத்தி மற்றும் ஆடைகள், பிடிபட்ட ஐந்து சந்தேகப்பேர்வழிகளில் ஒருவனிடமிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து 52 வயதான உள்ளூர் ஆடவரிடமிருந்து தங்களுக்கு புகார் கிடைத்தாகவும், 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் இரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது என்று அவர் விளக்கினார்.
அந்தப்பெண்ணின் உடல் முழுவதும் 12 கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டதோடு அந்த வாடகை அறையில் உள்ள ஒரு மெத்தையில் அந்த மியன்மார் பெண்ணின் உடல் சுற்றப்பட்டிருந்தது என்று ஏ.சி.பி. நாஸ்ரோன் குறிப்பிட்டார்.