டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

கோலாலம்பூர், டிச. 3-

பிரபல தொழில் அதிபரும், கோடீஸ்வருமான டான்ஸ்ரீ டி. ஆனந்தகிருஷ்ணனின் நல்லுடலுக்கு இன்று மாலையில் ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் இல்லம் வீற்றிருக்கும் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் பெர்ஹாலவில் உள்ள அவரின் இல்லத்தில் மாலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று பொது மக்களும், நண்பர்களும் அந்த தனவந்தகருக்கு தங்களின் இறுதி மரியாதையை செலுத்தினர்.

பொது மக்கள் இறுதி மரியாதை செலுத்தும் சடங்கு, இன்றிரவு 9 மணியுடன் நிறைவுபெற்றது. டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் நெருங்கிய நண்பரான முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, அவரின் துணைவியார் துன் சித்தி ஹஸ்மா, அவர்களின் புதல்வர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தியவர்களில் அடங்குவர்

முதல் முறையாக ஆனந்த கிருஷ்ணனின் இல்லத்திற்கு சென்ற பலர், அந்த வர்த்தக பிரமுகரின் இல்லத்தில் நின்றவாறு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டதையும் பரவலாக காண முடிந்தது.

ஆனந்த கிருஷ்ணன் நல்லுடல் கிடத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் புகைப்படம் எடுப்பதற்கு தகவல் சாதனங்களுக்கு அனுமதிி மறுக்கப்பட்டது.

தமது 86 ஆவது வயதில் காலமான ஆனந்தகிருஷ்ணனின் நல்லுடல், நாளை புதன்கிழமை கோலாலம்பூல், லொக் யூ இந்து மின்சுடலையில் தகனம் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS