மேலும் ஒன்பது அனைத்துலக வழித்தடங்களுக்கு விமானச் சேவை

கோலாலம்பூர், டிச.4-


மலேசியா மேலும் ஒன்பது அனைத்துலக வழித்தடங்களுக்கும், ஒரு சிறப்புச் சேவைக்கான வழித்தடத்திற்கும் புதிய விமானச் சேவைகளை அறிமுகப்படுத்தவிருப்பதாக சுற்றுலா, கலை,பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்துலக விமானச் சேவைகள் அனைத்தும் நாட்டின் தலைநகரான கோலாலம்பூர், ஜோகூர்பாரு, கோத்தா கினபாலு, லங்காவி மற்றும் பினாங்கு ஆகியவற்றுடன் இணைப்பை கொண்டு இருக்கும் என்று தியோங் கிங் சிங் குறிப்பிட்டார்.

இம்மாதம் மத்தியப்பகுதியில் இந்தியாவின் பிரதான விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஏர்லைன்ஸ், மலேசியாவையும், இந்தியாவையும் இணைக்கும் மூன்று புதிய வழித்தடங்களுக்கு தனது சேவையை தொடங்கவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

பெங்களூரிலிருந்து கோலாலம்பூர் மற்றும் லங்காவிற்கு தினசரி சேவையையும், சென்னைக்கும், பினாங்கிற்கும் இடையில் தினசரி சேவையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் மேற்கொள்ளவிருப்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தியோங் கிங் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று பத்தேக் ஏர் விமான நிறுவனம், தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிற்கும், ஜோகூர்பாருவிற்கும் தினசரி சேவையை மேற்கொள்ளவிருக்கும் வேளையில் ஏர் ஆசியா,வியட்நாம் சைகோனிலிருந்து கோத்தா கினபாலுவிற்கு வாரத்திற்கு மூன்று விமானச் சேவைகளை மேற்கொள்ளவிருப்பதாக தியோங் கிங் சிங் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS