கோலாலம்பூர், டிச.4-
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளுக்கு எதிராக நூறு விழுக்காடு வரியை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருப்பது குறித்து இவ்விவகாரத்தை மலேசியா மிக கவனமாக எதிர்கொள்ளும் என்று முதலீடு, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் மலேசியா, ஒரு கூட்டு நாடாக பங்கேற்றுள்ளது. ஆனால், உறுப்பு நாடு அல்ல. இருப்பினும் டிரம்பின் மிரட்டலை மலேசியா சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெங்கு ஸஃப்ருல் குறிப்பிட்டார்.
அமெரிக்க டாலருக்கு எதிராக போட்டி நாணயங்களை உருவாக்கும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு எதிராக 100 விழுக்காடு வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்துரைக்கையில் தெங்கு ஸஃப்ருல் மேற்கண்டவாறு கூறினார்.
டிம்பின் இந்த எச்சரிக்கை, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளோடு நின்று விடாது என்பதால் இவ்விவகாரத்தில் மலேசியா மிக கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெங்கு ஸஃப்ருல் விளக்கினார்.