பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் இராமசாமி வெளிநாடு பயணிக்கத் தடை

பினாங்கு, டிச.4-

பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பி.ராமசாமி, இன்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டார். உரிமை கட்சியின் தலைவரான அவர் இந்தோனேசியாவின் Banda Acehவுக்குப் பயணிக்க இருந்தார். ஆனால் குடிநுழைவு அதிகாரி இராமசாமியின் பெயர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் SPRM இன் கறுப்பு பட்டியலில் இருப்பதாக தெரிவித்தார்.

உரிமை கட்சியின் இடைக்கால செயலாளர் சதீஸ் முனியாண்டி இவ்விவகாரம் குறித்து பேசுகையில், பினாங்கின் SPRM அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, வெளிநாடு செல்ல தடையை புத்ராஜாவில் உள்ள SPRM தலைமையகம் பிறப்பித்ததாக கூறினார். இவ்விவகாரம், பினாங்கு இந்து அறநிலைய வாரியம் மீதான SPRMஇன் விசாரணையுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டது.

Wali Nanggroe Aceh ஆளுநர் அலுவலகம் இராமசாமியை வரவேற்கத் தயாராக இருந்தது. இந்த தடையானது நாட்டில் உள்ள அதிகாரவாத அரசியல் சூழ்நிலையைக் காட்டுகிறது என சத்தீஸ் கூறினார்.

இராமசாமி, உரிமை கட்சியின் தலைவர்கள் சத்தீஸ், டேவிட் மார்ஷல் ஆகியோர் பிற்பகல் 12.25 மணிக்கு பினாங்கிலிருந்து அச்சேவுக்கு பயணிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இராமசாமி வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியை விட ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் செயல்படும் SPRM மேலும் அதிகாரத்துவமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார் இராமசாமி. குற்றச்சாட்டுக்கு உள்ளான எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கடப்பிதழைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், எந்தக் குற்றப் பதிவும் இல்லாத தன்னை SPRM தடை விதித்துள்ளது நியாயமற்றது என இராமசாமி மேலும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS