கோலாலம்பூர், டிச.4-
17 மில்லியன் மலேசியர்களின் மைகாட் தரவுகள் கசிந்து இருப்பதுடன் , அவை கள்ளச்சந்தை அகப்பக்கத்திற்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று மறுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை ஆராயும் பொருட்டு தேசிய பதிவு இலாகாவிலும், நாஸ்கா எனப்படும் தேசிய சைபர் பாதுகாப்பு ஏஜென்சிலும் இவ்விவகாரம் உடனடியாக ஆராயப்பட்டதாக சைபுடின் குறிப்பிட்டார்.
எனினும் அப்படியொரு சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக சைபுடின் தெரிவித்தார்.
X கணக்கில், Fusion Inteligence Center @ StealthMole என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் இப்படியொரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக தகவல் சாதனங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இவ்வாறு மலேசியர்களின் மைகாட் தரவுகள், கசியுமானால், அவை நிதி மோசடி போன்ற ஏமாற்று வேலைகளுக்கு பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டு இருந்தது தொடர்பில் உள்துறை அமைச்சர் சைபுடின் எதிர்வினையாற்றினார்..
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தேர்தல் ஆணையம், அஸ்ட்ரோ மற்றும் மே பேங்க் மூலமாக ஒரு கோடியே 30 லட்சம் மலேசியர்களின் தரவுகள், கள்ளச்சந்தை அகப்பக்கத்தில் கசித்ததாக இதேபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.