துன் மகாதீருக்கு எதிராக குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரை

கோலாலம்பூர், டிச. 5-


ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் Batu Puteh பவளப்பாறைத் தீவு மற்றும் மிடல் ரோக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகிய தீவுகளின் இறையாண்மை தொடர்பாக அரச விசாரணை ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துன் மகாதீர் மீது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று அந்த அரச ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அனைத்துலக நீதிமன்றத்தினால் பத்து பூத்தே தீவு, சிங்கப்பூருக்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது உட்பட மேலும் இரண்டு தீவுகளின் இறையாண்மை குறித்து மீள் ஆய்வு செய்வதற்கும், பத்து பூத்தே தீவின் அரசுரிமை மலேசியாவிடமிருந்து பறிபோனதற்கும் காரணமாக இருந்த அம்சங்கள் மற்றும் காரணமானவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆழமான விசாரணை நடத்துவதற்கு மாமன்னரால் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் முகமட் ராவுஸ் ஷாரிப் தலைமையில் 7 ஆணையர்களை கொண்டு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் ஏமாற்று வேலைகளினால் மலேசியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பத்து பூத்தே தீவை சிங்கப்பூரிடம் இழக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு மலேசியா இலக்காகியது என்று அரச விசாரணை ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது.

இதன் தொடர்பில் பத்து பூத்தே தீவை இழப்பதற்கு நாட்டின் பிரதமர் என்ற முறையில் காரணமாக இருந்த துன் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார் செய்வது உட்பட அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு அரச விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

WATCH OUR LATEST NEWS