டிச.5-
இவ்வாண்டு ஜுலை மாதம் 21,22 ஆகிய தேதிகளில் சிலாங்கூர் மாநிலத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் நீர் விநியோகமின்றி அவதியுற்றதற்கு காரணமான Sungai Kuang நீர்மாசுப்பாட்டிற்கு பின்னணியில் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலை வளாகம் ஒன்று, தனது வணிக உரிமத்தை தவறாக பயன்படுத்தியதே முக்கிய காரணமாகும் என்று SPAN எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ அம்பலப்படுத்தியுள்ளார்.
நீர் சேவை விநியோகத்தை கண்காணிக்கும் ஆணையம் என்ற முறையில் சிலாங்கூர் மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு மிகப்பெரிய நீர்நெருக்கடிக்கு வித்திட்ட இந்த நீர்மாசுப்பாட்டிற்கு, குவாங் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை உரிமையாளர் தனக்கு வழங்கப்பட்ட உரிமத்தை, அதேதொழிலை நடத்தி வரும் சீனப் பிரஜைக்கு அவ்விடத்தில் தொழில் நடத்துவதற்கு வாடகைக்கு விட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர், செலாயாங் நகராண்மைக்கழகத்திற்கோ அல்லது சுற்றுச்சூழல் இலாகாவிற்கோ தெரிவிக்கவில்லை என்பது குறித்து தாங்கள் மேற்கொண்ட EIA எனப்படும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வில் தெரியவந்துள்ளதாக சார்லஸ் சந்தியாகோ விளக்கினார்.
இவ்வாறு தெரிவிக்காதது மூலம் சீன நாட்டவர் வழி நடத்திய சம்பந்தப்பட்ட மறுசுழற்சி தொழிற்சாலை வளாகம், மிக ஆபத்தான் கழிவுகளை சுங்கை குவாங் ஆற்றில் கொட்டும் சட்டவிரோத நடவடிக்கைக்கு அதன் உண்மையான உரிமையாளருக்கு வழங்கப்பட்ட உரிமத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.
இதன் காரணமாகவே சுங்கை குவாங்கில் கொட்டப்பட்ட மிக ஆபத்தான கழிவுகள், சுங்கை சிலாங்கூர் ஆற்றில் கலந்து, பயனீட்டாளர்களுக்கு ஆபத்தை தரவல்ல மிகப்பெரிய நீர் மாசுபாடு ஏற்பட்டு, Rantau Panjang மற்றும் Sungai Selangor நீர் சுத்திகரிப்பு மையத்தின் 1,2,3 ஆகிய நான்கு நீர் விநியோகப் பகுதிகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்று அவர் விளக்கினார்.
இவ்வாறு ஆபத்தான் கழிவுகளை கொட்டிய சட்டவிரோத செயல்மூலம் அந்த தொழிற்சாலை தனக்கு வழங்கப்பட்ட உரிமத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது என்று சைபர்ஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சார்லஸ் சந்தியாகோ விவரித்தார்.

இதன் தொடர்பில் சுங்கை சிலாங்கூரை நோக்கி பாயும் கிளை நதிகளில் தொழிற்சாலை வளாகங்கள் கழிவுகளை கொட்டாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு குவாங் வட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் திடீர் சோதனை நடத்துமாறு சிலாங்கூர் மாநில அரசையும், சுற்றுச்சூழல் இலாகாவையும் SPAN கேட்டுக்கொள்வதாக சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.