கோலாலம்பூர், டிச. 19-
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 30 கோடியே
20 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோத மற்றும் சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகளை நாட்டிலுள்ள நிதிக் கழகங்கள் முடக்கியுள்ளன என்று துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.
இணைய வழி வங்கி பயன்பாட்டில், பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பேங்க் நெகாராவின் மேற்பார்வையில் நிதிக்
கழகங்கள் அமல்படுத்திய ஐந்து முதன்மை தடுப்பு நடவடிக்கைளின் வாயிலாக நேர்மறையான பலன் கிடைத்துள்ளதாக லிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு 38 கோடியே 30 லட்சம் ரிங்கிட் வெள்ளி மதிப்பிலான சட்டவிரோத மற்றும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளையும்
இவ்வாண்டு செப்டம்பர் வரை 30 கோடியே 20 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பரிவர்த்தனைகளும் வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளன என்று லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தின் போது செனட்டர் போபி சுவான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் மேற்கண்டவாறு கூறினார்.