செபராங் பிறை, டிச.19-
தன்னை போலீஸ் அதிகாரி என்று அடையாளம் கூறிக்கொண்ட நபர், ஒருவர் குடும்ப மாதுவை ஏமாற்றி சுமார் 16 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகளை லாவகமாக வாங்கிச் சென்று மோசடி செய்துள்ளார் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 38 வயதுடைய மாது, அடையாளம் தெரியாத நபரிடம் தனது நகைகளை கொடுத்து ஏமாந்துள்ளதாக பினாங்கு, செபராங் பிறை உத்தாரா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிண்ட் சி. தர்மலிங்கம் தெரிவித்தார்.
ஓன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி, நேற்று அந்த மாதுவை தொடர்புகொண்ட ஆடவர் ஒருவர், பின்னர் தன்னை போலீஸ்காரர் என்று அடையாளம் கூறிக்கொண்டு, அந்த மாது லைசென்ஸின்றி ஒப்பனைப்பொருட்களை விற்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பின்னர் தனது உயர் அதிகாரியிடம் பேசும்படி, அந்த மாதுவை பணித்துள்ளார்.
அவர்களுக்கு இடையிலான உரையாடலில் அந்த மாது போதைப்பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் தொடர்பில் விசாரணைக்காக அந்த மாதுவின் நகைகளை உடனடியாக ஒப்படைக்கும்படிகூறி, அன்றைய தினம் பிற்பகல் ஒரு மணியளவில் தாசேக் குளுகோர் பகுதியில் சாலையோரத்தில் ஒரு நபர், அந்த மாதுவிடமிருந்து நகைகளை பெற்றுச் சென்றுள்ளார் என்று சூப்ரிண்ட் தர்மலிங்கம் தெரிவித்தார்.
நகைகளை கொடுத்தனுப்பியப் பின்னர் போலீஸ் அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நபரை அந்த மாது தொடர்பு கொண்ட போது, தொலைபேசி அடைக்கப்பட்டுள்ளது. தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்த அந்த மாது போலீசில் புகார் அளித்து இருப்பதாக தர்மலிங்கம் குறிப்பிட்டார்.