பத்து பூத்தே தீவு விவகாரம் : போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கினார் பாஸ் தலைவர்

கோலாலம்பூர், டிச. 19-


பத்து பூத்தே தீவு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவை தற்காப்பது போல் அரச விசாரணை ஆணையத்தின் முடிவை கேள்வி எழுப்பும் தன்மையில் அறிக்கை வெளியிட்டதாக கூறப்படும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தற்போது போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

பொது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்த ஓர் அறிக்கை தொடர்பில்,கடந்த திங்கட்கிழமை பெறப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில் பாஸ் தலைவர் தற்போது போலீசாரின் விசாரணைக்கு ஆளாகியிருப்பதை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் உறுதிப்படுத்தியுள்ளார்.

குற்றவியல் சட்டம், 505 மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் பாஸ் தலைவருக்கு எதிரான விசாரணை தொடங்கியுள்ளது.

அப்துல் ஹாடியிடம் விசாரணை செய்வதற்கு அவர் விரைவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்திற்கு அழைக்கப்படுவார் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி ஹாடி அவாங் வெளியிட்ட அறிக்கையானது, அரச விசாரணை அணையத்தின் முடிவை கேள்வி எழுப்புவது போல் அமைந்திருந்தது.

துன் மகாதீர் மீது குற்றவியல் வழக்கை பதிவு செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் அண்மையில் பரிந்து செய்து இருந்தது. இந்நிலையில் மற்றவர்கள் செய்த முட்டாள்தனத்திற்காக துன் மகாதீர் பொறுப்பேற்பதா? என்று ஹாடி அவாங் கேள்வி எழுப்பியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS