புதிய பண நோட்டுகள் அச்சிடப்படுவதை பேங்க் நெகாரா நிறுத்தாது

கோலாலம்பூர், டிச. 20-


புதிய பண நோட்டுகள் அச்சிடப்படுவதை மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா நிறுத்தாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

e- wallet போன்ற ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டப் பின்னர் பண நோட்டுகளை பயன்படுத்தி வர்த்தக கொள்முதல் செய்யும் நடைமுறை, மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது என்ற போதிலும் நாட்டின் நிதி பரிவர்த்தனையில் தலையாய நாணயமாக விளங்கி வரும் கரன்சி நோட்டுகள் தேவைகள் தொடர்ந்து இருப்பதாக அந்த மத்திய வங்கி, ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய வடிவிலான மலேசிய கரன்சி நோட்டுகளான ஒரு ரிங்கிட், 5 ரிங்கிட், 10 ரிங்கிட், 50 ரிங்கிட் மற்றும் 100 ரிங்கிட் பண நோட்டுகள் யாவும் ஆகக்கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டதாகும் என்பதை பேங்க் நெகாரா விளக்கியது.

மலேசியாவின் பொருளாதார கட்டமைப்பு முறையில் பண நோட்டுகள் புழக்கம், இன்னமும் ஓர் அத்தியாவசிய தேவையாக பார்க்கப்படுகிறது என்று பேங்க் நெகாரா குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS