கோலாலம்பூர், டிச. 20-
நாட்டில் நீதித்துறை நெருக்கடி மீண்டும் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன் எச்சரித்துள்ளார்.
நீதிதுறை பரிபாலனத்தின் உச்சப்பீட வரிசையில் இரண்டாவது நிலையில் உள்ள மலாயா தலைமை நீதிபதி பதவி, இன்னம் நிரப்பப்படாமல், கிட்டத்தட்ட பத்து மாத காலமாக இழுபறி நிலையில் இருந்து வருவது, நீதித்துறை நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக மனித உரிமைப் போராட்டவாதியான அம்பிகா நினைவுறுத்தினார்.
கடந்த 1988 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத நீதித்துறை நெருக்கடி, மீண்டும் நிகழ்வதற்கான அறிகுறிகளே மலாயா தலைமை நீதிபதி பதவி இன்னும் நிரப்படாமல் இருப்பதற்கான தொடக்க அடையாளங்களாகும் என்று ஒரு சட்ட வல்லுநரான அம்பிகா குறிப்பிட்டார்.
நாட்டின் நீதித்துறை நிலைக்குத்தும் அளவிற்கு மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம், தமக்கு மேலோங்கியிருப்பதாக அம்பிகா குறிப்பிட்டார்.
சட்டத்துறையில் தாம் கொண்டுள்ள அனுபவத்தின் வாயிலாாக இந்த உண்மையை அறிய முடிவதால் அப்படியொரு சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என்று கோலாலம்பூரில் வழக்கறிஞர் மன்ற கட்டட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அம்பிகா இதனை தெரிவித்துள்ளார்.