கோலாலம்பூர், டிச. 23-
கடந்த 2018 ஆம் ஆண்டில் நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கம், பிரபலங்களை உள்ளடக்கிய முக்கிய வழக்குகள், அவசர கதியில் தொடுக்கப்பட்டவை என்ற உண்மை கண்டறியப்படுமானால் அந்த வழக்குகள் விசாரணை செய்யப்படுவதிலிருந்து உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபா நாயர் டான்ஸ்ரீ அஸார் அஸிஸான் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் நீதித்துறை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், வழக்கு விசாரணைகளில் பழிவாங்கும் படலம் அரங்கேறுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் நாடாளுமன்ற சபா நாயகராக பொறுப்பேற்று இருந்த சட்ட வல்லுநருமான டான்ஸ்ரீ அஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் ஒரு பழிவாங்கும் நோக்கில் ஒரு சில வழக்குகள் தொடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த சனிக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து டான்ஸ்ரீ அஸார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் விடுதலை கடுமையான விமர்சனத்திற்கு இலக்காகியுள்ள வேளையில், அந்த வழக்கு உட்பட சில வழக்குகள் அவசர கதியில் தொடுக்கப்பட்டதற்கு அரசியல் வஞ்சமே மூலக்காரணமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டு இருந்தார்.