சதுரங்க போட்டி: வெல்லெஸ்லி மற்றும் கோ.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின

கெடா, டிச. 24-

கெடா, கூலிம் மாவட்ட அளவில் 5 ஆவது முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டியில் லுனாஸ் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியும் பாயா பெசார் கோ.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியும் இறுதி சுற்றில் சம நிலையான புள்ளிகளைப் பெற்று அவ்விரு பள்ளிகளும் சாம்பியன்ஷிப் கோப்பையைத் தட்டிச் சென்றதாக கூலிம் மாவட்ட இந்தியர் சதுரங்க இயக்கத்தின் தலைவர் விமலன் தெரிவித்தார் .

கூலிம் மாவட்ட இந்தியர் சதுரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் ஒத்துழைப்புடன் பாடாங் செராய் ஹென்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆதரவில் மிகவும் விமரிசையாக இந்த சதுரங்க போட்டி நடைபெற்றது . கூலிம் மாவட்டத்திலுள்ள 7 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 264 மாணவர்கள் இந்த சதுரங்க போட்டியில் பங்கெடுத்ததாக விமலன் கூறினார்.

காலை 7.30 மணி அளவில் தொடங்கப்பட்ட சதுரங்க போட்டி, 7 சுற்றுகள் நடத்தப்பட்டன . மாணவர்கள் சற்றும் தன்னம்பிக்கைக் குறையாமல் விளையாடியதாக விமலன் குறிப்பிட்டார். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த சதுரங்க போட்டியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகின்றதே தவிர குறையவில்லை . இது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சதுரங்க போட்டியின் மீது வைத்துள்ள ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது என்றார் அவர். .

மேலும் , 2024 ஆம் ஆண்டின் கூலிம் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான நடைபெற்ற இந்த சதுரங்க போட்டியில் இரண்டாவது இடத்தை பாடாங் செராய் ஹென்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளித் தட்டிச் சென்றனர். அதுமட்டுமின்றி இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பரிசுகளும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன.

இவ்வருட இச்சதுரங்க போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்வத்தற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கும் இப்போட்டிக்கு பக்கபலமாக கைக்கொடுத்த ஹென்டறேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கும் விமலன் நன்றினைத் தெரிவித்துக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS