கோலாலம்பூர், டிச.31-
கோலாலம்பூர் மாநகரில் சில காலியிடங்களை பிடித்துக்கொண்டு, வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் 5 ரிங்கிட் முதல் 10 ரிங்கிட் வரை கட்டணத்தை வசூல் செய்து வந்த சட்டவிரோதக் குடியேறிகளை உள்ளடக்கிய கும்பல் முறியடிக்கப்பட்டது.
24 மணி நேரமும் சுழல் முறையில் காலியிடங்களில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்த அந்த சட்டவிரோதக்குடியேறிகளுக்கு எதிராக, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஒத்துழைப்புடன் மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட ஓப் குத்திப் கே.எல். ஸ்ரைக் ஃபோர்ஸ் எனும் அதிரடி சோதனை நடவடிக்கையில் 17 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர் மாநகரில் புக்கிட் பிந்தாங் மற்றும் ஜாலான் பெராங்கான் ஆகிய இரு பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கிய சோதனையில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய சட்டவிரோதக்குடியேறிகள் பிடிபட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் முகமட் சாவ்பி யூசோப் தெரிவித்தார்.
பிடிபட்ட 17 பேரில் 15 பேர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சிய இருவர் வங்காளதேசப்பிரஜைகள் ஆவர் என்று அவர் குறிப்பிட்டார்.