பினாங்கு, ஜன. 2-
பி.பி.ஏ. எனப்படும் பினாங்கு நீர் வினியோகிப்பு வாரியத்தின் இயக்குநர் பதவியிலிருந்து ஜக்டீப் சிங் டியோ நீக்கப்பட்டுள்ளதை பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோ உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசிய பங்குச் சந்தை நிர்ணயித்துள்ள குறைந்தப்பட்ச விதிமுறைகளை நிறைவு செய்ய தவறியதற்காக இயக்குநர் பொறுப்பிலிருந்து ஜக்டீப் சிங், அகற்றப்பட்டுள்ளார் என்று சோவ் கோன் இயோ குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாரியத்தின் இயக்குநர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள், ஆண்டுக்கு ஐந்து முறை நடைபெறும் நீர் விநியோகிப்பு வாரியத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளையில் ஓர் இயக்குநர் குறைந்த பட்சம் 50 விழுக்காடு வருகையை நிறைவு செய்ய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்.
மருத்துவ சிகிச்சைக்கான விடுப்பு உட்பட பல்வேறு காரணங்களினால் அந்த நிபந்தனைகளை நிறைவு செய்ய முடியாத சூழல் ஜக்டீப் சிங்கிற்கு ஏற்பட்டுள்ளதால். அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சோவ் கோன் இயோ விளக்கம் அளித்துள்ளார்.