பூச்சோங், ஜன.4-
பூச்சோங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 39 வயது இந்தோனேசிய மாது ஒருவர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு பொறாமையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒரு கட்டுமானத் தொழிலாளியான 23 வயது வங்காளதேச ஆடவர், நேற்று மாலை 4.30 மணியளவில் புத்ராஜெயா, பிரிசிண்ட் 20 இல் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் ஹோட்டலில் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் மாது கிடப்பதாக உள்ளூர் ஆடவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்ததாக அன்பழகன் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட வங்காளதேசிக்கு அந்த மாது, நன்கு அறிமுகமானவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.