தமிழர்களின் பெருமை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தெரிய வேண்டும் டத்தோஸ்ரீ சுந்தராஜு பேச்சு

பினாங்கு, ஜன.4-


தமிழர்கள் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் பாரம்பரியப் பெருமை, உலக முழுவதும் உள்ள தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

உலக நாகரிகங்களில் இடம் பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்களாக தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் தமிழர் பண்பாடு, உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடாகும்.

அத்தகைய ஒரு சிறப்புடைய தமிழ் மக்களின் பெருமைகளை தொடர்ந்து அடுத்த தலைமுறையினரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். கொண்டு செல்லப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு வலியுறுத்தினார்.

இன்று சனிக்கிழமை பினாங்கு, டேவான் ஸ்ரீ பினாங் அரங்கில் தொடங்கியுள்ள உலகளாவிய தமிழ் வம்சாவளி மாநாட்டு நிகழ்வில் பேராளர்கள் அனைவரையும் வரவேற்று சிறப்புரை நிகழ்த்துகையில் மாநாட்டின் இணை ஏற்பாட்டாளரான டத்தோஸ்ரீ சுந்தராஜு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மாநாட்டை பினாங்கு முதலமைச்சர்
சோவ் கோன் இயோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு அமைச்சர் உட்பட பிரமுகர்கள் மற்றும் பேராளர்கள் சுமார் 700 பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய டத்தோஸ்ரீ சுந்தராஜு,
தங்களுக்கென்று ஒரு தனிப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் கொண்டுள்ள பெருமைக்குரிய ஓர் இனமாக காணப்படும் தமிழர்களின் பண்பாடு இன்று வரையிலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது என்றால் அதனை கட்டிக்காத்து வருகின்ற தமிழர்கள் பெருமைக்குரியவர் ஆவர்.

இந்த சிறப்பு, தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே மாநாட்டின் இணை ஏற்பாட்டாளர் செல்வகுமாருடன் இணைந்து, தமிழர்களின் பெருமைக்கு அணிகலன் சேர்க்கும் வகையில் முதல் முறையாக தமிழ்நாட்டுக்கு வெளியே மலேசியாவில் பினாங்கில் உலகளாவிய தமிழ் வம்சாவளி மாநாடு நடத்தப்படுவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு தமது ஆதரவை நல்கிய பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோ, பெலித்தா உணவக உரிமையாளர் டான்ஸ்ரீ ரமேஷ், டத்தோ ராஜேந்திரன் உட்பட இன்னும் பல பேருக்கு டத்தோஸ்ரீ சுந்தராஜு தமது உரையில் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS