ஜன.5-
ஜோகூர், ஸ்கூடாய் Taman Sutera இடைநிலைப் பள்ளி ஆசிரியர் கே. திபன்ராஜ், மாணவர்களுடன் இணைந்து 42 புத்தாக்கத் திட்டங்களை உருவாக்கியதற்காக ‘Asian Education Awards 2024’ இல் சிறந்த ஆசிரியர் விருதைப் பெற்றுள்ளார். இவர் அப்பள்ளியில் அறிவியல் பாடமும் மல்டிமீடியா பாடங்களையும் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
திபன்ராஜ் தொழில்நுட்பம், நேரடி கற்றல் , புத்தாக்கம் அடிப்படையிலான திட்டங்கள் மூலம் மாணவர்களை வழிநடத்தியுள்ளார். எந்திரவியல் – ரோபாட்டிக்ஸ், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு உதவியுள்ளது.
அவர் அறிமுகப்படுத்திய சில திட்டங்களில் மிக முக்கியமானது ‘Underground drone for search and rescue’ எனப்படும் நில்த்தடி தேடல் – மீட்புக்கான ட்ரோன்’. இது நிலத்தடி பகுதிகளைக் கண்காணிக்கவும் மீட்புக் குழுக்களுக்கு உதவவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘smart chicken feeder’ , Projek waktu wise” froggy IOT போன்ற திட்டங்களும் குறிப்பிடத்தக்கவை.
froggy IOT திட்டம் சுற்றுச்சூழல் நிலைமைகளையும், குறிப்பாக நீரின் தரத்தையும் கண்காணிக்கிறது. ஒரு ஆசிரியரின் உண்மையான சாதனை, மாணவர்கள் தங்கள் முழு திறனையும் அடைவதில்தான் உள்ளது என்று திபன்ராஜ் கூறுகிறார்.
திபன்ராஜ் ‘மலேசியா ஆசிரியர் தூதர்’ திட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் திட்டம் கல்வியாளர்களுக்கு பயிற்சி அளித்து கல்வியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகும்.