கோலாலம்பூர், பிப்.14-
நாட்டில் இந்தியர்களைத் தளமாக கொண்ட 200 க்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் செயல்பட்ட போதிலும் அரசாங்கம் வழங்கக்கூடிய தலா 30 ஆயிரம் ரிங்கிட் இலவச மானியத் தொகையைப் பெறுவதற்கு வெறும் 17 கூட்டுறவுக் கழகங்கள் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வேதனை தெரிவித்தார்.
இந்திய கூட்டுறவுக்கழகங்களை விரிவுப்படுத்துவது, வர்த்தகத்திற்கான பொருட்களை வாங்குவது, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது முதலிய நோக்கங்களுக்காக தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள SKM எனப்படும் மலேசிய கூட்டுறவு சங்க ஆணையத்தினால் இந்த இலவச மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய கூட்டுறவுக்கழகங்கள் இந்த இலவச மானியத்தை பெற்று, தங்கள் கூட்டுறவுக்கழகத்தை அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். ஆனால், இந்த இலவச மானியத்தைக்கூட பெறுவதற்கு நமது கூட்டுறவுக்கழகங்கள் முயற்சிக்கவில்லை என்றால் உண்மையிலேயே தமக்கு பெரும் கவலையை தருகிறது, நமது கூட்டுறவுக்கழகங்களில் என்னதான் நடக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் வினவினார்.
நேற்று கோலாலம்பூரில் மலேசிய கூட்டுறவு சங்க ஆணையத்தால் மானிய உதவி மற்றும் சுழல் மூலதன நிதி காசோலை வழங்கும் நிகழ்விற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ ரமணன் இதனை தெரிவித்தார்.

மலேசிய கூட்டுறவு சங்க ஆணையம் வழங்கக்கூடிய நிதி உதவியை எவ்வாறு பெறுவது, அவற்றை எந்தெந்த நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு இந்திய கூட்டுறவுக்கழகங்களுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி மிகப் பெரிய மாநாட்டை தங்கள் அமைச்சு நடத்தியதையும் டத்தோஸ்ரீ ரமணன் நினைவுகூர்ந்தார்.
இந்த மாநாட்டில் 200 க்கும் மேற்பட்ட இந்திய கூட்டுறவுக்கழகங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இவ்வளவு பெரிய மாநாடு நடத்தியப் பின்னரும் வெறும் 17 கூட்டுறவுக்கழகங்கள் மட்டுமே இந்த இலவச மானியத்தை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளன என்றால் எதை நோக்கி நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம் என்று டத்தோஸ்ரீ ரமணன் வினவினார்.

எனினும் நமது கூட்டுறவுக் கழகங்களுக்கு இந்த மானியத்தை வழங்குவது தொடர்பில் அனைத்து மாநிலங்களிலும் முகப்பிடங்கள் திறந்து, அவற்றை பதிவு செய்வதற்கு ஏதுவாக தற்போது மலேசிய கூட்டுறவு சங்க ஆணைத்துடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இந்திய சமூகத்தில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த எட்டு இந்திய சமூக கூட்டுறவு கழகங்களுக்கு மொத்தம் 1.4 மில்லியன் நிதி உதவியை டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வழங்கினார்.