டெல்லி, பிப்.16-
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசம் செல்லும் ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இரவு 10 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று விடுமுறை என்பதால் பிரயாக்ராஜ் செல்ல ஏராளாமானோர் டெல்லி ரயில் நிலையம் வந்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 18 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்