மியான்மாரில் இந்திய விமானப்படை விமானம் மீது இணையத் தாக்குதல்

மியன்மார், ஏப்ரல்.14-

மியான்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப் படை விமானத்தின் சிக்னல்கள் மீது நடுவானில் இணையத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மியான்மாரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படையினர் மியான்மார் நிலநடுக்க மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப் படை விமானத்தின் சிக்னல்கள் மீது நடுவானில் இணையத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இணையத் தாக்குதல்கள் மூலம் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானிகளுக்குப் பொய்யான தகவல்கள் கிடைக்கத் தொடங்கின. இதனால் குழப்பமடைந்த விமானிகள், அவசர கால சிக்னல்களைப் பயன்படுத்தி உண்மை நிலவரங்களை அறிந்து கொண்டனர். இதனால் இணையத் தாக்குதலை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.

WATCH OUR LATEST NEWS