‘ஆபரேஷன் சிந்தூர்’ : 18 விமான நிலையங்கள் மூடல்; 200 விமானச் சேவைகள் ரத்து

புதுடெல்லி, மே.07-

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் 200 விமானங்களின் சேவை மே 10ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்.,22ம் தேதி பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைப் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பதிலடி தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம், மொத்தம் 9 பயங்கரவாதிகளின் தளங்களைத் தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் 244 இடங்களில் போர் பயிற்சி ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்ரீநகர், லே, அமிர்தரஸ், சண்டிகர் உள்பட 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS