கோலாலம்பூர், மே.08-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் பிரதானக் கூட்டணியாக விளங்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று காலையில் தொடங்கியது.
இன்று மே 8 ஆம் தேதியும், நாளை 9 ஆம் தேதியும் இரண்டு தினங்களுக்கு நடைபெறும் வேட்புமனுத் தாக்கலில் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.
அதே வேளையில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு காலை 10.30 மணி வரை ஐவர், வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பிகேஆர் கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ், சுங்கை பூலோ தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ R. ரமணன், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸீ ஸின், செனட்டர் அபுன் சுய் அன்யிட் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங் ஆகிய ஐவர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக அறியப்படுகிறது.