பெட்டாலிங் ஜெயா, மே.11-
சிகாகோவில் நடைபெறும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் தேசியத் தாரகை எஸ்.சிவசங்கரி வாகை சூடினார். அவர், ஸ்பெயினின் மார்டா டொமிங்குவேஸைத் தோற்கடித்தார். உலகின் 9வது இடத்தில் உள்ள சிவசங்கரி, உலகின் 52வது இடத்தில் இருக்கும் டொமிங்குவேஸுக்கு எதிராக எதிர்பார்த்ததை விட சற்று அதிக நேரம் எடுத்துக் கொண்டார். ஆனால் முதல் சுற்றில் 11-4, 11-5, 16-18, 11-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
சிவசங்கரி அடுத்து உலகின் 17வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராஹிமை இரண்டாவது சுற்றில் எதிர்கொள்வார். அவ்வாட்டத்தில் அவர் இப்ராஹிமுக்கு எதிரான தனது ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்ட முயற்சிப்பார்.
சிவசங்கரியைத் தவிர்த்து மற்றொரு வீராங்கனையான ஐரா அஸ்மான், இங்கிலாந்தின் டோரி மாலிக்கை 11-8, 10-12, 11-7, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் ஒரு வீராங்கனையான ரேச்சல் அர்னால்ட் 11-9, 11-9, 4-11, 11-3 என்ற செட் கணக்கில் எகிப்தின் நூர் ஹெய்கலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.