அமெரிக்க அதிபருடன் சந்திப்பு நடத்துவதற்கு அன்வார் கடிதம்

கோலாலம்பூர், மே.26-

ஆசியானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு ஆதரவு கேட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குக் கடிதம் எழுதியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு முற்பகுதியில் லங்காவியில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்களுக்கான ஆசியான் மாநாட்டைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அன்வார் குறிப்பிட்டார்.

அமெரிக்கா – ஆசியான் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் அமெரிக்க அதிபரின் ஆதரவும்,புரிதலும் அவசியமாகும். மையப்படுத்தப்பட்ட கொள்கைக்கு தீவிர உறுதிப்பாட்டை நிரூபிக்க இத்தகைய சந்திப்பு மிக முக்கியம் என்று அன்வார் வலியுறுத்தினார்.

இன்று கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள 46 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் ஆசியான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரியானது, ஆசியான் நாடுகளை வெகுவாகப் பாதித்துள்ளதாக அன்வார் சுட்டிக் காட்டினார்.

அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பினால் ஆசியானில் இடம் பெற்றுள்ள கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்னாம் போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்வார் தெளிவுபடுத்தினார்.

மலேசியாவிற்கு 24 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ள வேளையில் சிங்கப்பூருக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்பட்டு இருப்பதையும் அன்வார் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS