புதுடெல்லி, மே.26-
இந்தியாவிக் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 1000த்தைக் கடந்துள்ளது. கேரளா, டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா அறிகுறிகளுடன் பலர் இருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்தது. பல்வேறு மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று வரை 257 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், மே 26ம் தேதி கணக்குபடி, நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, கேரளா, மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கேரளாவில் 335 பேர் புதியதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டு உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 430 ஆக உள்ளது.
மஹாராஷ்டிராவில் 153 பேரும், டில்லியில் 99 பேரும் கண்டறியப்பட்டு உள்ளனர். இதையடுத்து, மஹாராஷ்டிராவில் 209 பேரும், டில்லியில் 104 பேரும் தற்போது வரை சிகிச்சையில் இருக்கின்றனர்.
குஜராத்தில் 83 பேர், கர்நாடகா 47 பேர், உத்தரப்பிரதேசம் 15 பேர்,மேற்கு வங்கம் 12 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இன்றைய(மே 26) நிலவரப்படி ஒட்டு மொத்தமாக 1007 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.