சிரம்பான், மே.27-
தனது மனைவிக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு அனைத்து குத்தகைகளையும் கொடுத்ததாக நெகிரி செம்பிலான் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையின் உதவி இயக்குநர் ஒருவர், சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
50 வயது ரோஸ்லி பிலுஸ் என்ற அந்த உதவி இயக்குநர் நீதிபதி டர்மாபிஃக்ரி அபு அடாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி சிரம்பானில் உள்ள நெகிரி செம்பிலான் மாநில இளைஞர், விளையாட்டுத்துறை அலுலகத்தில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள அந்த உதவி இயக்குநர், குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரியுள்ளார்.