பல்பொருள் அங்காடியில் பொருட்களைக் களவாடிய குடும்பத்தினர் கைது

மூவார், மே.27-

ஜோகூர், மூவாரில் உள்ள ஒரு பல்பொருள் பேரங்காடியில் தள்ளுவண்டி நிறைய பொருட்களைத் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், அந்த பேரங்காடியில் வேலை செய்யும் பணியாளர் ஆவார். தனது குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் களவாடியப் பொருட்களை முகப்பிடத்தில் ஸ்கேன் செய்வது போல் நடித்து, அந்த நபர், குடும்ப உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதி அளித்து இருப்பதாக நம்பப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் மற்றொரு பணியாளர், அந்த தள்ளுவண்டியைத் தடுத்து நிறுத்தி, ரசீதைக் கேட்ட போது அவர்களால் பதில் ஏதும் சொல்ல முடியாத நிலையில் அவ்விடத்திலேயே அவர்கள் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவம் கடந்த மே 14, 24 மற்றும் 25 ஆம் தேதி ஆகிய மூன்று தினங்களில் நிகழ்ந்துள்ளன. இதனால் அந்த பேரங்காடிக்கு மொத்தம் மூவாயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS