கோலாலம்பூர், மே.29-
டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் வீட்டுச் சிறைக் குறித்த “ரோயல் அடெண்டும்” ஆவணத்தின் இருப்பை உறுதிச் செய்ய அரசுக்கு குறைந்தது ஏழு அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என மூத்த வழக்கறிஞர் டான் ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா கூறினார்.
அந்தக் 7 கடிதங்கள் முன்னாள் மலேசிய சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ அஹ்மாட் தெரிருடின் முகமட் சால்லே, உள்துறை அமைச்சு மற்றும் சிறைத்துறை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றைப் பெற்றதாக உறுதிப்படுத்த அரசாங்கம் மறுத்து விட்டதாகவும் முகமட் ஷாஃபி கூறினார்.
அந்த ஆவணம் இல்லையென்றால் அவர்கள் முறையான பதில் அளித்திருக்க வேண்டும். மாறாக அவர்கள் மௌனமாக இருப்பது அந்த ஆவணம் உண்மையில் இருப்பதைக் காட்டுகிறது என அந்த மூத்த வழக்கறிஞர் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.