பாரிசான் நேஷனலிருந்து மசீச. வெளியேறுகிறதா?

கோலாலம்பூர், மே.30-

பாரிசான் நேஷனலிருந்து மசீச. வெளியேறி, பெரிக்காத்தான் நேஷனலில் இணையலாம் என்று ஆருடங்கள் பலமாக வலுத்து வரும் வேளையில், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அந்தக் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் தீ லியான் கேர் அறிவுறுத்தியுள்ளார்.

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது தூரத்திலிருந்து பார்ப்பதற்குச் சுகமாகவும் பசுமையாகவும் இருக்கும். ஆனால், சுதந்திரத்திற்கு முன்பிலிருந்து கூட்டணியில் ஓர் அங்கம் வகித்தக் கட்சி என்ற முறையில் தனது வரலாற்றை மசீச இழந்து விடக்கூடாது என தீ லியான் கேர் வலியுறுத்தினார்.

கூட்டணியில் வெற்றி, தோல்விக்கு மத்தியில் பாரிசான் நேஷனலில் இருந்து, அக்கட்சிப் போராட வேண்டும். மீண்டும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்று தீ லியான் கேர் கேட்டுக் கொண்டார்.

இன அடிப்படையிலான அரசியல் கட்சியை, மலாய்க்காரர் அல்லாத பெரும்பாலோர் வெறுக்கத் தொடங்கி விட்டனர். அதே வேளையில் ஒரு கடுமையானக் காலக் கட்டத்தில் தாய்க் கட்சி, பிரச்னையை எதிர்நோக்கி உள்ள வேளையில் அதனை விட்டு ஓடுவது என்பது பொறுப்பற்றச் செயல் ஆகும்.

சீன சமூகத்தின் பொறுப்பான கட்சி என்றால் மண்ணோடு மண்ணாக மண் மூடிப் போவதை விட, கட்சியின் நலன் சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்துப் போராட வேண்டும். போராட்டம் மிகுந்த கட்சியே வெற்றி பெறும், பயந்து ஓடுவது இல்லை என்று தீ லியான் கேர் அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS