உலக அழகிப் பட்டம் வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபால் சுச்சாத்தா

ஹைதராபாத், ஜூன்.01-

2025ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தைத் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுச்சாத்தா ஒபால் சுவாங்ஶ்ரீ வென்றுள்ளார்.

இந்தியா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 72ஆவது மிஸ் வோர்ல்ட் உலக அழகிப் போட்டி, கடந்த மே 10 ஆம் தேதி தொடங்கி, நேற்று மே 31 ஆம் தேதி சனிக்கிழமை இரவு நிறைவு பெற்றது.

இந்த உலக அழகிப் போட்டியில் 108 நாடுகளில் இருந்து அழகிகள் பங்கேற்றனர். அமெரிக்காஸ் கரீபியன், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா-ஓசினியா என்று ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், அதன் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. 20 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தாய்லாந்தைச் சேர்ந்த சுச்சாத்தா ஒபால் சுவாங்ஶ்ரீ, எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹஸ்செட் டெரெஜெ அட்மஸ்சு, போலந்தைச் சேர்ந்த மாஜா கிளாஞ்டா, மார்டினிகைச் சேர்ந்த அவ்ரெலி ஜொவாக்கிம் என இந்த நான்கு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

தனித் திறமை, நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டு, அதில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் அடுத்தடுத்தச் சுற்றுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இதன் இறுதிச் சுற்றில், 21 வயதே ஆன சுச்சாத்தா ஒபால் சுவாங்ஶ்ரீ உலக அழகிப் பட்டத்தை வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் வோர்ல்ட் பட்டத்தை வென்ற கிரிஸ்ட்டினா பிஸ்கோவா மகுடத்தைச் சூட்டினார். உலக அழகிப் போட்டி வரலாற்றில் தாய்லாந்து, உலக அழகியாக வெற்றிப் பெற்று சாதனைப் படைத்து இருப்பது இதுவே முதல் முறையாகும். சுச்சாத்தாவிற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் ரொக்க வெகுமதியாக வழங்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS