கோலாலம்பூர், ஜூன்.02
பிளவுகளையும் பேதங்கைளையும் விதைக்க வேண்டாம் என்று அரசியல் தலைவர்களுக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நினைவுறுத்தினார்.
மாமன்னரின் இந்த பிறந்த தினத்திற்கு, தரக்கூடிய ஓர் உன்னத பரிசு, மக்களின் ஒற்றுமையே. மக்களின் ஒற்றுமையைத் தவிர வேறு எந்தவொரு பரிசும் /தமக்கு பெரியது அல்ல, அதற்கான எதிர்பார்ப்பும் இல்லை என்று மக்கள் நலன் பேணும் மாமன்னரான சுல்தான் இப்ராஹிம் தமது பிறந்தநாள் உரையில் குறிப்பிட்டார்.
மலேசியர்கள் ஒன்றுபடுவதைக் காண்பதை விட, தமது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நிகரான சிறப்பு பரிசு எதுவும் இல்லை என்று சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
தற்போது நாட்டைப் பாதிக்கும் ஓர் ஆபத்து உள்ளது. அதாவது மக்களிடையே பிளவுகளையும், பேதங்களையும், சச்சரவையும் , விதைத்து, மக்களிடையே பிரிவினையை உண்டுப் பண்ணும் பேராபத்து இருப்பதாக மாமன்னர் நினைவுறுத்தினார்.
தத்தம் கட்சிகளின் உள்விவகாரங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உட்பட எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்று நாட்டுத் தலைவர்களுக்கு மாமன்னர் ஞாபகப்படுத்தினார்.
சர்ச்சைக்கும், பிளவுகளுக்கும் பேதங்களுக்கும் இடம் அளித்தால் அது நாட்டின் நிலைத்தன்மையை இழக்கச் செய்து விடும். உணர்வுப்பூர்வமான பிரச்னைகளைக் கையாளுவதில் அரசியல் சித்து விளையாட்டு வேண்டாம் என்று சமூகத் தலைவர்களுக்கு மாமன்னர் நினைவுறுத்தினார்.
தமது பிறந்தநாளையொட்டி இன்று இஸ்தானா நெகாராவில் ஆற்றிய உரையில் மாமன்னர் மேற்கண்ட நினைவுறுத்தலை விடுத்துள்ளார்.