புதுடெல்லி, ஜூன்.03-
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு 36 பேர் பலியாகி உள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். முன் எப்போதும் இல்லாத வகையில் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை மோசமடைந்துள்ளது. இடைவிடாமல் பெய்து வரும் மழையின் காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
மழை, வெள்ளத்திற்கு இதுவரை 36 பேர் பலியாகி இருக்கின்றனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது. அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாநிலமான அசாமில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக, அருணச்சால பிரதேசத்தில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இங்கு மழை, நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி இருக்கின்றனர். மேகாலயாவில் 6 பேர், மிசோரமில் 5 பேர், சிக்கிம்மில் 3 பேர், திரிபுராவில் ஒருவர் என பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மற்ற மாநிலங்களை விட கனமழையால் அசாம் பெரும் பாதிப்பைச் சந்தித்து இருக்கிறது. மழை மேலும் வலுக்கும் என்று வானிலை மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, நிவாரணப் பணிகளில் மட்டுமல்லாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அந்தந்த மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.