தமிழ் வண்ண விழா 2025

ஷா ஆலாம், ஜூன்.04-

தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தின்  மேன்மையைப் பறைசாற்றும் நிகழ்வாக தமிழ் வண்ண விழா 2025 அண்மையில் சிலாங்கூர், ஷா ஆலம் செக்சன்  32, எம்.பி.எஸ்.ஏ. ஏஸ்டர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சிலாங்கூர் மாநிலத்தின் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு  அதிகாரப்பூர்வமாகத்  தொடக்கி வைத்த  இந்நிகழ்வில் ஒற்றுமைத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், ஷா  ஆலம் மாநகர் மன்றத்தின் சமூக மேம்பாட்டுத் துறை இயக்குநர் ஷாரின் அகமது உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

தமிழ் மொழி மற்றும் தமிழர்களின்  பாரம்பரியம் மற்றும் கலை, கலாசாரத்தைப் பேணி மேலோங்கச்  செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வை மலேசிய கல்வியமைச்சின் ஆதரவுடன்  ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 13வது மண்டலம்,  எஸ்.ஆர்.எஃப்.ஏ. கலை மற்றும் கலாசார அமைப்பு, ஸ்ரீ ராதா கிருஷ்ணன்   இசை மற்றும் கலைப் பயிலகம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. 

இந்நிகழ்வின் முத்தாய்ப்பு அங்கமாக ஆயிரத்து 31  மாணவர்கள் ஒன்று சேர்ந்து மகா கவி பாரதியாரின் அச்சமில்லை என்ற பாடலை ஒன்று சேர்ந்து பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். அது மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது மிகப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.  

அந்நிகழ்வில் உரையாற்றிய ஒற்றுமைத் துறைத் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இந்நவீன மற்றும் பரபரப்பான உலகில், நமது அடையாளத்தையும் பண்பாட்டையும் வலுப்படுத்த இத்தகைய நிகழ்வுகள் அவசியம் என வலியுறுத்தினார். பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு இன்றி இத்தகைய நிகழ்வை ஏற்பாடு செய்வது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

WATCH OUR LATEST NEWS