கூட்ட நெரிசல் சம்பவம்: பெங்களூரு கிரிக்கெட் அணி நிர்வாகி உட்பட நால்வர் கைது

பெங்களூரு, ஜூன்.06-

பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெங்களூரு கிரிக்கெட் அணி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்.சி.பி., எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். கூட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து பெண்கள் உட்பட 11 பேர் பலியாயினர். இது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. ‘பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாட, ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று தெரியாதா? ஒரே நேரத்தில் விதான் சவுதா, சின்னசாமி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடத்தியது ஏன்? மாநில அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?’ என, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததை, இயற்கைக்கு மாறான மரணம் என்று, போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம், டி.என்.ஏ., என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாக கமிட்டி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெங்களூரு கிரிக்கெட் அணியின் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

WATCH OUR LATEST NEWS