பெங்களூரு, ஜூன்.07-
11 பேரை பலி வாங்கிய வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி முதல் முறையாக வென்றிருக்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை தம் வசப்படுத்தி இருக்கிறது. இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் வகையில் பெங்களூரு சின்னசாமி திடலில் திரளான கூட்டம் கூடியது.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்தை அடுத்து பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், வெற்றிக் கொண்டாட்ட ஏற்பாட்டாளர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவானது.
இதே சமயத்தில் கூட்ட நெரிசலுக்கு விராட் கோலியும் ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறார். எனவே அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் போலீஸ் புகார் அளித்து இருந்தார்.
ஐபிஎல் போட்டி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அவரின் தூண்டுதலின் பேரில் தான் மிக பெரும் கூட்டம் கூடியது என்று அதில் கூறப்பட்டு இருந்தது. தற்போது கூட்ட நெரிசலுக்கும், கோலிக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ஆகிய இருவரும் தாங்களாகவே முன் வந்து தங்கள் பதவிகளில் இருந்து விலகி உள்ளனர்.